Monday, 2 December 2013

ஆடை அணிவது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது



மனிதன் இன்று வித விதமாய், வண்ண வண்ணமாய் உடுத்து நெகிழும் ஆடைக்குத்தான் என்னே மவுசு!  உண்மையில் ஆடை அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். ஆடை மட்டும் இல்லாதிருந்தால் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசமின்றி போயிருக்கும்.
ஆதமுடைய மக்களே! நிச்சயமாக நாம் உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்கார ஆடைகளையும் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம்.        (அல்குர்ஆன் 7:26)

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். மனிதன் உடுத்தும் ஆடைகளை வைத்தே அவனைத் தரம் பிரித்து விடமுடியும். ஏனெனில் ஆடை என்பது வெறும் துணி மட்டு மல்ல. மாறாக அதை அணிபவரின் சிந்தனை, நடவடிக்கைகள், ஒழுக்கங்களில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரைகுறை ஆடை அணிபவரின் எண்ணங்களும் நடவடிக்கைகளும் அரைகுறையாகவே இருக்கும். எனவே தான் ஷைத்தான் தனது சூழ்ச்சிகளை செயல்படுத்த முதல் வேலையாக முதல் மனிதரின் ஆடைகளையே கழற்ற முயன்றான். 

“அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு (இப்லீஸாகிய) ஷைத்தான் தவறான எண்ணத்தோடு அவர்கள் மனதில் ஊசலாடச் செய்தான். அவர்களை நோக்கி அதன் (தடுக்கப்பட்ட மரத்தின்) கனிகளை புசித்தால் நீங்களிருவரும் மலக்குகளாகவோ மரணமற்றவர்களா கவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி உங்கள் இறைவன் அம்மரத்தை விட்டும் உங்களை தடுக்கவில்லை. நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையை நாடுபவனாகவே இருக்கின்றேன் என்று சத்தியஞ் செய்து கூறினான். அவர்களை மயக்கி (அம்மரத்தின் கனியை புசிப்பதற்காக அதன் பால் அவர்களை) செல்ல வைத்தான். அவ்விருவருமே அம்மரத்தின் கனியை சுவைத்த போது அவர்களின் மறைவிடங்கள் அவர்களுக்கு தெரியவாரம்பித்தது. அச்சமயம் இலைகளைக் கொண்டு தங்களை மூடிக் கொள்ள முயற்சித்தனர்.                  (அல்குர்ஆன் 7:20-22)

அல்லாஹ் கூறும் இந்நிகழ்ச்சியின் மூலம் மனிதனை படைக்கும் போதே ஆடையையும் அல்லாஹ் படைத்துவிட்டான் என்பதையும் விளங்கமுடிகிறது. அன்று, முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்களிடம் தன் சூழ்ச்சியை ஆரம்பித்த ஷைத்தான் இன்று உல கெங்கும் அதை பரப்பி தனது சூழ்ச்சியில் ஓரளவு வெற்றிக் கொடியை பறக்கவிட்டிருக்கிறான். அவனது சூழ்ச்சியில் வீழ்ந்த இன்றைய மனிதர்கள் உடலின் அங்க அவயங்கள் தெரியுமளவு மெல்லிய ஆடைகள், உடல் அமைப்பு விகாரமாக தெரியுமளவு இறுக்கமான ஆடைகள், அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு அதற்கு மாடல் ஃபேஷன் என்று மேற்கத்தியவர்களைப் பின்பற்றி நவீன பெயர் சூட்டிக் கொள்கின்றனர். மிருகங்கள் ஆடை உடுத்துவதில்லை, எந்தளவு மனிதன் ஆடையை குறைப்பானோ அந்த அளவு மிருகங்களுடன் நெருங்கி வருகிறான் என்பதை மனிதன் எப்போது புரியப்போகிறான்?

எல்லா காலத்திற்கும் வழிகாட்டும் தகுதிபடைத்த தன்னிகரில்லா தன்மை கொண்டு விளங்கும் அல்குர்ஆன் மூலமாகவும் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாகவும் சிறந்த முன்மாதிரியை, முன்னோடிகளை நமக்களித்துள்ள இஸ்லாம் ஆடையைப் பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

கடமையான அளவு
ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாலாஹு அலைஹி வஸல்லம் தொப்புளுக்கும் முட்டுக்காலுக்கும் மத்தியிலுள்ள பகுதி (ஆண்களுக்கு) கட்டாயமாக மறைக்கப்பட வேண்டிய (அவ்ரத்) பகுதியாகும்” என்று கூறினார்கள்.
(பெண்கள்) தங்கள் அழகி(ய உடலி)லிருந்து (சாதாரணமாக) வெளியில் தெரிவதை தவிர வேறு எப்பகுதியையும் வெளிக்காட்ட வேண்டாம். (அல்குர்ஆன் 24:31) என்று ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரை உள்ள பகுதிகளையும் பெண்களுக்கு முழு உடல் பகுதியையும் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதியாக ஆக்கியுள்ளது.

பட்டாடை :
ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டை எடுத்து தனது வலது கையிலும் தங்கத்தை எடுத்து தமது இடது கையிலும் வைத்துக் கொண்டு இவ்விரண்டும் எனது உம்மத்தினரில் ஆண்களுக்கு ஹராமாகும்” என்று கூறினார்கள்.   (நூல் : அபூதாவூத்)

குங்குமச் சிவப்பு நிற ஆடை :
பொதுவாகவே நிறம் என்று எடுத்துக் கொண்டால் இது கூடும் அது கூடாது என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. எனினும் குங்குமச் சிவப்பு நிற ஆடையை ஆண்கள் அணிவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பாததால் அதை தவிர்த்துக் கொள்வது விரும்பத்தக்கது.

ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “என் மீது குங்குமச் சிவப்பு நிற ஆடையைப் பார்த்த நபி ஸல்லல்லாலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன இது? என்று வினவினார்கள். (அந்த கேள்வியின் தோரணையிலேயே) இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். உடனே திரும்பிச் சென்று அதை எரித்துவிட்டேன். பிறகு “அந்த ஆடையை என்ன செய்தீர்”? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ. அதை எரித்து விட்டதைக் கூறினேன். அதற்கு நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஏன்? உமது வீட்டில் (பெண்களுக்கு) அதை அணியக் கொடுத்திருக்கலாமே” என்று கூறினார்கள்.            (நூல் : அபூதாவூத்)

வெள்ளை நிற ஆடை :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரங்களில் கலர் ஆடை அணிந்திருந்தாலும் அவர் களுக்கு பிடித்ததும் அவர்கள் ஆர்வமுட்டி கூறியதும் வெள்ளை நிற ஆடைதான்.
ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “வெள்ளை நிற ஆடையை நீங்கள்  அணியுங்கள், ஏனெனில் அது சிறந்ததும் பரி சுத்தமானதுமாகும், மேலும் உங்களில் மரணித்தோருக்கும் அதைக் கொண்டே கஃபனிடுங்கள்” என்று கூறினார்கள்.   (நூல் : அபூதாவூத்)
இந்த ஹதீஸின் மூலம் வேறு நிற ஆடைகளை அணிவது கூடாது என்பது பொருளல்ல. சிலர் கறுப்பு நிற ஆடையை பீடையாகவும், துர்குறியின் அடையாளமாகவும் கருதுகிறார்கள். இதற்கு இஸ்லாத்தில் எவ்வித சான்றும் இல்லை. மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கறுப்பு நிற சில வகை ஆடைகளை அணிந்துள்ளார்கள்.
ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்பு நிற தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தார்கள்.     (நூல் : முஸ்லிம்)

ஆண்களின் கோலத்தைத் தரிப்பது :
மறைக்க வேண்டிய உறுப்புகளை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிவது கடமையாகும். ஆண்கள் பெண்களின் கோலத்தையோ பெண்கள் ஆண்களின் கோலத்தையோ தரிப்பதற்கு ஹதீஸில் தடைவந்துள்ளது.
ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்ணின் ஆடையை அணியும் ஆணையும், ஆணின் ஆடையை அணியும் பெண்ணையும் சபித்தார்கள்.              (நூல் : அபூதாவூத்)

சிரிக்கவல்ல சிந்திக்க...
ஒருவர் தனது அருகில் நின்றவரிடம் “அந்தப் பையனைப் பாருங்க! ரொம்ப நேரமா இங்கேயே நின்னுக்கிட்டுருக்கான்” என்றார். உடனே அவர் அது பையனில்லை. என் பொண்ணு” என்று கோபமாக கூறினார். இவர் “ஸாரி மிஸ்டர்! எனக்குத் தெரியாது” என்று கூற அதற்கு அவர் “மிஸ்டரா? ஐயோ நான் அதோட அப்பா இல்ல. அம்மா” என்றாராம். இப்படித்தான் இன்று யாரைப் பார்த்தாலும் ஆண்களின் உடையை பெண்கள் அணிந்து கொள்வதும் முகத்தை முற்றிலும் வழித்துக் கொண்டு ஆண்களும் பெண்களைப் போன்றிருப்பதும் அதிகமாகிவிட்டது.
அது மட்டுமின்றி இன்றைய பெண்கள் அலங்காரத்தோடு வெளியே செல்வது பர்தாவைப் பேணாமலிருப்பதும் ஒழுக்க விழுமங்களை கேள்விக்குறியாக்கிவிட்டது. வீட்டை திறந்துவைத்துக் கொண்டு யாரும் திருடர்களை வரவேற்பதில்லை. அதே போன்று மெல்லிய ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிந்து தனது அலங்காரத்தை திறந்து வைத்துக் கொண்டு அந்நியர்களின் தவறான பார்வைகளை பெண்கள் வரவேற்கக் கூடாது.

எச்சரிக்கை
ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “நரகவாசிகளினின்றும் இரு கூட்டத்தார்கள். அவர்களை (இன்னும்) நான் காணவில்லை. (இனிவரும் காலங்களில் தோன்றுவார்கள்) 1) மாட்டு வால்களைப் போன்று சவுக்குகள் வைத்துக் கொண்டு அதைக் கொண்டு மக்களை அடித்துத் துன்புறுத்துவார்கள் (கொடுங்கோலர்கள்) (2) ஆடை அணிந்த (போதிலும்) நிர்வாணமாக இருக்கும் பெண்கள் (அவர்கள் ஆண்களை தங்களின் பால்) ஈர்க்கக் கூடியவர்களாகவும் தாங்களும் (அவர்களின் பால்) ஈர்ப்பாகக் கூடியவர்களாகவும் இருப்பர். அவர்களின் தலைகளை ஒட்டகத் திமிழ்களைப் போன்று வைத்திருப்பர். இவ்விரு கூட்டத்தாரும் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்கள். மேலும் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைய மாட்டார்கள். (நூல் : முஸ்லிம்)
கணவனைத் தவிர்த்து மற்ற ஆடவர்களுக்கு தமது அலங்காரம் தெரியுமளவு உடை உடுத்தும் பெண்களும் பெயருக்கு புர்கா (பர்தா) போட்டுக் கொண்டு தலையில் ஒன்றுமில்லாமல் சுற்றும் இளைஞிகளும் இந்த எச்சரிக்கையான ஹதீஸை அறிந்து உணர்வு பெறவேண்டும்.

எளிமையான ஆடை
ஹள்ரத் முஆத் இப்னு அனஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதை கூறினார்கள் : “யார் வசதியிருந்தும் அல்லாஹ்விற்காக பணிவாக இருக்கவேண்டும்  என்று (பெருமையான பகட்டான) ஆடைகளை அணிவதை தவிர்த்துக் கொள்கிறாரோ மறுமை நாளில் இறைவன் அனைத்து படைப்பினங்கள் முன்னிலையில் அவரை அழைத்து அவர் விரும்பும் ஆடையை அவருக்கு அணிவிப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (நூல் : திர்மிதி)

சக்திக்குட்பட்ட சிறந்த ஆடை அணிதல் :
அதற்காக கஞ்சத்தனம் மேலிட பார்ப்பவர் நகைத்திடுமளவு அழுக்காக ஆடை அணியக்கூடாது. வசதி இருப்பின் அல்லாஹ் தனக்களித்த அருட்கொடையை வெளிப்படுத்தும் நோக்கில் நல்ல, பிடித்தமான ஆடையை அணியலாம்.
ஹள்ரத் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதாக கூறுகிறார்கள் : “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்பொழுது நான் பழைய ஆடை அணிந்திருந்தேன். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமக்கு வசதி உள்ளதா? என்றார்கள். அதற்கு நான் “ஆம்! இறைவன் எனக்களித்த ஒட்டகங்கள், அடி மைகள், ஆடுகளினின்றும் எனக்கு வசதி உள்ளது என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமக்கு இறைவன் கொடுத்த வசதியை (நிஃமத்தை) உன் மீது பார்க் கப்பட வேண்டும் என்று கூறினார்கள்.      (நூல் : முஸ்னத் அஹ்மத்)

பகட்டான ஆடை :
அதற்காக பெருமை யடிக்கும் நோக்கத்தில் ஆடை அணியக்கூடாது. ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “யார் இந்த உலகத்தில் பிரபல்யமான (பகட்டான) ஆடை அணிகிறாரோ மறுமையில் இறைவன் அவருக்கு இழிவின் ஆடையை அணிவிப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (நூல் : அஹ்மது)

உருவமில்லா ஆடை
ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு மெத்திருக்கை (சிusலீவீஷீஸீ) வாங்கியிருந் தார்கள். அதில் உருவம் இருந்தது. (அதைப் பார்த்த) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாசலிலேயே நின்று விட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் நான் ஏதேனும் பாவம் செய்திருப்பின் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன் என்று கூறினார்கள். இது என்ன மெத்திருக்கை? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க “நீங்கள் உட்காருவதற்கும், சாய்வதற்கும் நான் தான் வாங்கியுள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உருவம் வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் வரைந்திருக்கும் உருவங்கள் உயிர் கொடுங்கள் என்று அவர்களுக்கு கூறப்படும். நிச்சயமாக மலக்குமார்கள் உருவம் உள்ள வீட்டில் நுழையமாட்டார்கள்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.                    (நூல் : புகாரி)
மேலும் தம் வீட்டில் சிலுவை படம் உள்ள அனைத்து பொருட்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைத்ததாகவும் புஹாரி ஷரீஃபில் வருகிறது.

ஆடை அணியும் போது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் ஆடை அணிந்தால் “அல்ஹம்துலில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஷகனீஹி மின் ஙைரி ஹவ்லிம் மின்னீ வலா குவ்வா (என்னுடைய எந்த சக்தியும் எந்த முயற்சியுமின்றி எனக்கு இந்த ஆடையை வழங்கி எனக்கு இதை அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”) என்று ஓதட்டும்” என்று கூறினார்கள்.        (நூல் : அபூதாவூத்)

புத்தாடை அணியும் போது :
ஹள்ரத் அபூ சயீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதிய தலைப்பாகையோ அல்லது புதிய ஆடையையோ அணிந்தால் “அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹீ வஅஸ்அலுக மின் கைரிஹீ வகைரி மா ஸுனிஅ லஹு - வஅஊதுபிக மின் ஜர்ரிஹு வஜர்ரி மா ஸுனிஅ லஹு (எனக்கு ஆடை அணிவித்த அல்லாஹ்வே! உனக்கே எல்லாப் புகழும்! மேலும் நான் உன்னிடம் இதன் நலவையும் இது உருவாக்கப்பட்டதின் நலவையும் வேண்டுகிறேன். மேலும் இதன் கெடுதியையும் இது உருவாக்கப்பட்டதின் கெடுதியை விட்டும் உன்னி டம் பாதுகாப்பு தேடுகிறேன்” என்று ஓதும் வழமையுடையவர்களாக இருந்தார்கள்.  (நூல் : திர்மிதி)

ஆடையை கழற்றும் போது :
ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜின்களின் கண்களுக்கும் மனிதர்களின் மர்மஸ்தானத்திற்கும் மத்தியில் மறைவு ஏற்பட (வேண்டுமானால்) அவர் தனது ஆடையை கழற்றும் போது பிஸ்மில்லாஹ் என்று ஓதிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.                 (நூல் : திர்மிதி)

அணியும் முறை :
ஹள்ரத் ஆயிஜா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தமான விஜயங்களுக்கும் செருப்பு அணியும் போதும் தலை சீவும் போதும் வலது பக்கத்தை முற்படுத்துவதையே விரும்பி வந்தார்கள்.   (நூல் : இப்னுமாஜா)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஆடை அணியும் போதும் முதலில் வலது பக்கத்தையே முற்படுத்துவதும் கழற்றும் போது இடது பக்கத்தை முற்படுத்துவதும் சுன்னத்தாகும்.

கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிவது :
அக்காலத்தில் அரபிகளிடம் கரண்டைக் காலுக்கு கீழ் எவ்வளவு தூரம் பூமியை தொடுமளவு ஆடை அணிபவாரோ அவர் அந்தளவு உயர்ந்தவராக கருதப்பட்டார். அணிபவர்களும் அதை பெருமை நோக்கத்தில் அணிந்து வந்தார்கள். எனவே அப்போது அது பெருமையடிப்பவர்களின் பேஃஷனாகவே ஆகிவிட்டிருந்தது. இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வன்மையாக கண்டித்தார்கள். எனவே இது சம்பந்தப்பட்ட ஹதீஸ்களையும் பெருமை நோக்கத்தில் அல்லாமல் இவ்வாறு ஆடை அணிவதின் நிலையையும் சில ஹதீஸ்களின் மூலம் இங்கு பார்ப்போம்.

ஹதீஸ் 1 :
ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : கீழாடையை கரண்டைக்கு கீழ் அணிந்தால் அந்த (கரண்டைக்கு கீழ் உள்ள காலுடைய)பகுதி நரகத்திலே இருக்கும் -  என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.             (நூல் : புஹாரி)

ஹதீஸ் 2 :
ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “யார் தனது ஆடையை பெருமையடிக்கும் நோக்கத்தில் (கரண்டைக் காலுக்கு கீழ்) இழுத்துக் கொண்டு செல்கிறாரோ அவரை அல்லாஹ் கியாமத் நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.    (நூல் : புகாரி)

ஹதீஸ் 3 :
ஹள்ரத் அபூ ஸயீத் அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ஒரு முஃமினின் கீழாடை அவனது பாதி கெண்டைக்கால் வரை இருக்க வேண்டும். (கெண்டைக்கால் - முட்டிற்கும் கரண்டைக்கும் மத்தியில் உள்ள பகுதி) அதையும் தாண்டி அவன் கரண்டைக் கால் வரை (எதுவரை வேண்டுமானாலும்) அணிவதில் தவறில்லை. ஆனால் அதையும் தாண்டி (கரண்டைக் கீழ்) அணிந்தால் அப்பகுதி நரகத்திலே இருக்கும் என்று கூறியபிறகு பெருமையடிக்கும் நோக்கில் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவனை அல்லாஹ் கியாமத் நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று 3 முறை திரும்ப திரும்ப கூறினார்கள்.(நூல் : அபூதாவூத்)

ஹதீஸ் 4 :
ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது முஸ்லிம்களின் தூதுவராக ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள். அங்கு தங்களின் சிறிய தந்தையின் மகன் அபான் இப்னு சயீத் வீட்டில் தங்கினார்கள். காலையில் மக்காவின் தலைவர்களை சந்திக்க கிளம்பினார்கள். அந்நேரத்தில் ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கீழாடை இஸ்லாமிய போதனையின் படி கரண்டைக்கு மேல் இருந்தது. இதைக் கண்ட அபான் இப்னு சயீத் கூறினார். “உஸ்மான் அவர்களே! அரபிகளிடம் எந்த மனிதர் எவ்வளவு கீழ்நோக்கி (கரண்டை வரை) ஆடைகளை அணிவாரோ அந்தளவு அவர் உயர்ந்தவராக கருதப்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியும்! தாங்கள் மக்கா தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறீர்கள். இவ்வாறு ஆடையை அணிந்து சென்றால் அவர்கள் உங்களை கண்ணியமாக பார்க்கமாட்டார்கள். பேச்சு வார்த்தை முழுமை பெறாது என்று கூறியபோது உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். “முடியாது! நீர் கூறுவதை போன்று ஒருபோதும் என்னால் அணிய முடியாது. ஏனெனில் நான் அணிந்திருப்பதைப் போன்று தான் எனது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்திருப்பார்கள் என்று கூறி மறுத்து விட்டார்கள்.   (நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபஹ்)

ஹதீஸ் 5 :
ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “யார் பெருமையடிக்கும் நோக்கத்தில் தன் ஆடையை இழுத்துக் கொண்டு செல்கிறாரோ அவரை அல்லாஹ் கியாமத் நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று கூற அருகில் இருந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் “யா ரசூலல்லாஹ்! என்னையும் அறியாமல் என் ஆடை கீழே இறங்கி விடுகிறதே! என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ரே நான் உம்மைச் சொல்லவில்லை! பெருமை யடிக்கும் நோக்கில் அணிபவர்களையே சொன்னேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.      (நூல் : புகாரி)

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் மார்க்க வல்லுனர்களால் மூன்று வகையினருக்கு இவ்வாறு தீர்ப்பு சொல்லப்படுகிறது.

முதல் வகை :
பெருமையடிக்கும் நோக்கில் கரண்டைக்கு கீழ் ஆடை அணிதல் : இது மக்ரூஹ் தஹ்ரீம் (ஹராமுக்கு மிக நெருக்கம்) ஆகும். ஒரு சில ஹதீஸ்கலை வல்லுனர்களும் இமாம்களும் இதை ஹராம் என்று கூறுகிறார்கள். இதற்கு இரண்டு எச்சரிக்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹதீஸ் என் 2,3) விடுத்தார்கள். (1) அப்பகுதி நரகிற்குரியது, (2) அல்லாஹ் அவரை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.
கியாமத் நாளில் அடியார்கள் அனைவருமே அல்லாஹ்வின் கருணைப் பார்வையின் தேவையுடையவர்களாக இருக்கும் போது அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்பது எவ்வளவு கடுமையான எச்சரிக்கை என்பதை உணரவேண்டும்.

இரண்டாவது வகை :
பெருமையடிக்கும் நோக்கம் இல்லாமல் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிவது  : இது மக்ரூஹ் ஆகும். ஏனெனில் ஹதீஸ் எண் 1 ல் குறிப்பிட்டதைப் போன்று சில ஹதீஸ்களில் பெருமையை பற்றி குறிப்பிடாமல் பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. மட்டுமின்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்கள் (ஹதீஸ் எண் 4) தாபியீன்கள் அனைவருமே கரண்டைக்கு மேல் ஆடை அணிந்துள்ளதாகவே காண முடிகிறது. எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளின் மீது ஆர்வமுடைய வர்கள் கண்டிப்பாக இதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு கேள்வி - பதில் :
கேள்வி : பேண்ட் அணிவது இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணானதா?
பதில் : மறைக்க வேண்டிய உறுப்புகளை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிவது கட்டாயம். ஃபேண்ட்டைப் பொருத்தவரை அது வழமையில் உள்ள ஆடையாகி விட்டது. மறைக்க வேண்டிய உறுப்புகளைகளையும் முழுமை யாக மறைத்து விடுவதால் அது ஷரீஅத்திற்கு முரணாகாது. ஆனால் கரண்டைக் குக் கீழ் இருந்து அதனால் பெருமை ஏற்பட்டால் அதை அணிவது கூடாது. அதை கரண்டைக் காலுக்கு மேல் மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அவ்வாறு தைத்து விடலாம். அதே போன்று அங்க அவயங்களின் அளவு தெரியுமாறு இறுக்க மாக அணிவதும் நல்லதல்ல. நாகரிகமும் அல்ல.

மூன்றாம் வகை :
பெருமையடிக்கும் நோக்கமில்லை. அவர் கரண்டைக்கு கீழும் ஆடை அணிய வில்லை. எனினும் சில நேரம் அவரையும் அறியாமல் ஆடை கீழிறங்கி விடுகிறது. ஹதீஸ் எண் 5-ல் சொல்லப்பட்டது போன்று இதற்கு எந்த குற்றமுமில்லை.

2 comments: