பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நான்
உங்களுக்கு தந்தையைப் போன்றவன்”என்று கூறியது மட்டுமின்றி தந்தையை விட மேலாக
தங்கள் சமுதாயத்திற்கு (பிள்ளைகளுக்கு) அணு அணுவாக தேவையான அனைத்தையும் கற்றுக்
கொடுத்தார்கள். மலம், ஜலம்
கழிக்கும் முறையைக் கூட கற்றுத் தர தவறவில்லை.
ஒரு முறை ஹள்ரத் ஸல்மான் (ரலி) அவர்களிடம் முஷ்ரிகீன்கள்
கேலி செய்த வண்ணம் ‘என்ன? உங்கள்
நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுக்கு மலம், ஜலம் கழிக்கும் முறைகளை கூட கற்றுத் தருகிறாராமே!’ என்று
கேட்டதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று கூறி அதன் சில முறைகளையும்
கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
அன்று முஷ்ரிகீன்கள் கேலியாக கேட்ட இந்த நபிகளாரின் வழிமுறை
இன்று அந்த வழிமுறையில் ஏற்படும் மருத்துவ பலன்களையும் உடல் ஆரோக்கியத்தையும்
கண்டு விஞ்ஞானமே ஆச்சரியப்பட்டு நிற்கிறது. அந்த வழிமுறைகள் என்ன? பலன்கள் என்ன? சிலவற்றையாவது
தெரிந்து கொள்வோமே!
தூரமான இடத்திற்குச் செல்வது
நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம், ஜலம்
கழிப்பதற்காகச் சென்றால் தூரமான இடத்திற்கு செல்வார்கள். (அறிவிப்பாளர் : ஹள்ரத் முஃஙீரதுப்னு ஷுஃபா, நூல் : அபூதாவூது)
கழிப்பிடம் நுழையும் முறை
நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தமான
இடங்களுக்குள் நுழையும் போதும் செருப்பு அணி யும் போதும் தலை சீவும் போதும் வலது
பக்கத்தை முற்படுத்துவதையே விரும்பி வந்தார்கள்.
(அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி),
நூல் : இப்னுமாஜா)
இதனடிப்படையில் மலம் ஜலம் கழிக்க கழிப்பிடம் நுழையும்
பொழுது இடது காலை முதலில் வைத்தும் வெளியேறும் பொழுது வலது காலையும் முதலில்
வைத்தும் வெளியேற வேண்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் : “ஜின்களின்
கண்களுக்கும் மனிதர்களின் மர்மஸ்தலங்களுக்கும் மத்தியில் மறைப்பு ஏற்பட
(வேண்டுமானால்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் முன் ‘பிஸ்மில்லாஹ்’ என்று ஓதிக்
கொள்ளட்டும். (அறிவிப்பாளர்:
ஹள்ரத் அலி (ரலி), நூல்:
திர்மிதி)
மல ஜலம் கழிக்கச் செல்லும் பொது ஓதும் துஆ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடம் செல்ல
நாடினால் “அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” (இறைவா!
நிச்சயமாக நான் கெட்ட ஆண் ஜின்கள்,
பெண் ஜின்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.) என்ற துஆவை
ஓதுவார்கள். (அறிவிப்பாளர் :
ஹள்ரத் அனஸ் (ரலி), நூல் :
புகாரி)
எனவே நாம் கழிப்பிடம் செல்லும் போது இவ்விரு துஆக்களையும்
ஓதிக் கொள்ள வேண்டும்.
தலையை மறைத்தல், செருப்பு அணிதல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடம் செல்லும்
போது தலையை மறைத்து, கால்களுக்கு
செருப்பு அணிந்தவர்களாக செல்வார்கள்.
(அறிவிப்பாளர்
: ஹள்ரத் ஹபீப் இப்னு ஸாலிஹ் (ரலி),
நூல் : ஸுனனுல் குப்ரா)
உட்காருந்து சிறுநீர் கழிப்பது
“ஒரு முறை நான் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உமரே! நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதீர்” என்று
தடுத்தார்கள்: அதன் பிறகி லிருந்து நான் நின்ற நிலையில் சிறுநீர் கழித்ததேயில்லை. (அறிவிப்பாளர் :
ஹள்ரத் உமர் (ரலி), நூல் :
திர்மிதி)
“நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக யாரேனும் கூறினால் அதை
உண்மைப்படுத்தாதீர்கள்: ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்ற
நிலையில் சிறுநீர் கழிப்பதில்லை”
(அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி),
நூல் : திர்மிதி)
குறிப்பு : ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஒரு முறை நின்று சிறுநீர் கழித்ததாக வருகிறது. ஆனால் அந்நேரத்தில் சில
தவிர்க்க முடியாத காரணத்தால் அவ் வாறு செய்தார்களே தவிர அவர்களின் நிரந்தர வழி
முறை உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதாகத்தான் இருந்துள்ளது.
உட்காரும் முறை
1) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு மலம்,
ஜலம் கழிக்க உட்காரும் போது சற்று இடது பக்கமாக (பாரம் கொடுத்து) சாய்ந்து
அமருவதற்கு கற்றுக் கொடுத்தார்கள்.
(அறிவிப்பாளர்:
ஹள்ரத் சுராகதுப்னு ஜூஃஷா (ரலி),
(நூல் : திர்மிதி)
2) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை
முன்னோக்கியோ, பின்னோக்கியோ
அமர வேண்டாம். மாறாக கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக அமர்ந்து கொள்ளுங்கள். (அறிவிப்பாளர்:
ஹள்ரத் அனஸ் (ரலி), நூல் :
புகாரி)
குறிப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவைக்
கருத்தில் கொண்டு கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள். ஆனால் இந்தியாவைக் கவனித்து
கிப்லாவின் திசை மேற்கில் இருப்பதால் வடக்கு அல்லது தெற்கு திசையை முன்னோக்கி
அமரவேண்டும்.
3) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்,
ஜலம் கழிக்க அமரும் போது பூமிக்கு மிக நெருக்கமாகும் போதுதான் தங்களது ஆடையை
உயர்த்துவார்கள். (இதனால் நமது மர்மஸ் தானத்தை மற்றவர்கள் பார்க்க முடியாது) (அறிவிப்பாளர் :
ஹள்ரத் அனஸ் (ரலி), நூல் :
திர்மிதி)
இடது கையால் சுத்தம் செய்வது
1) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக நான் உங்களுக்கு தந்தையைப்
போன்றவன். எனவே உங்களுக்கு ஒரு விஷயத்தை கற்றுக் கொடுக்கிறேன். நீங்கள் (மல, ஜலம் கழித்தபின்)
வலது கையைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டாம். (அறிவிப்பாளர்:
ஹள்ரத் அபூஹுரைரா (ரலி), நூல் :
இப்னு மாஜா)
2) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் வலது கை உணவருந்துதல் மற்றும் சுத்தமான விஷயங்களுக்காகவும், இடது கை (மலம் ஜலம்
கழித்த பின்) சுத்தம் செய்யவும்,
அசுத்தத்தை நீக்குவதற்கும் பயன்பட்டு வந்தது. (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூது)
டேலா உபயோகப்படுத்துவது
உங்களில் ஒருவர் மலம்,
ஜலம் கழிக்கச் சென்றால் அவர் தன்னுடன் 3 கற்களை
எடுத்துச் செல்லட்டும். அவைகளைக் கொண்டு சுத்தம் செய்யட்டும். நிச்சயமாக கற்கள்
அசுத்தத்தை நீக்கிவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பாளர்:
அன்னை ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூது)
பொதுவாக நாம் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோம். எனினும்
கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யலாம். இவ்வாறு கற்களைக் கொண்டு மட்டும்
சுத்தம் செய்யும் பட்சத்தில் குறைந்த பட்சம் 3 கற்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 3 கற்களைக்
கொண்டும் சுத்தமாகாவிட்டால் சுத்தமாகும் வரை கற்களை அதிகப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வதை விட
தண்ணீரைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வது சிறந்தது. மேலும் தண்ணீரைக் கொண்டு
மட்டும் சுத்தம் செய்வதை விட கற்களைக் கொண்டும் தண்ணீரைக் கொண்டும் சுத்தம்
செய்வது சிறந்தது. அவ்வாறு இரண்டைக் கொண்டும் சுத்தம் செய்பவர்களை அல்லாஹ்வே
புகழ்ந்து கூறியுள்ளான்.
அதிலே (குபா எனும் ஊரிலே) மிக பரிசுத்தவான்களாக இருப்பதை
விரும்புபவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும் பரிசுத்தவான்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 8:108)
என்ற வசனம் இறங்கியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் குபாவாசிகளை நோக்கி “அல்லாஹ்வே உங்களின் சுத்தத்தை புகழ்ந்து கூறுமளவிற்கு
நீங்கள் சுத்தம் செய்யும் முறைதான் என்ன?”
என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “யாரஸூலல்லாஹ்! நாங்கள் (மலம், ஜலம் கழித்த பின்)
கற்களைக் கொண்டும் தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்வோம். (ஏதேனும் ஒன்றைக் கொண்டு
மட்டும் போதுமாக்கிக் கொள்ள மாட்டோம்) என்று பதில் கூறினார்கள். (நூல் : இப்னு மாஜா)
இவைகளைக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது.
“நீங்கள்
விட்டை (சாணம்) யைக் கொண்டும் எலும்புகளைக் கொண்டும் அசுத்தத்தை நீக்காதீர்கள்.
ஏனெனில் அவை உங்களின் சகோதர சமுதாயமான ஜின்களின் உணவாக பயன்படுகிறது” என்று நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹள்ரத் இப்னு மஸ்ஊத்
(ரலி), நூல்:
திர்மிதி)
“ஒரு முறை ஜின்களில்
ஒரு கூட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஜராகி, ‘யாரஸுலல்லாஹ்! ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்! உங்களின் சமுதாயம் எலும்புகளைக் கொண்டும், விட்டையைக்
கொண்டும், அடுப்புக்
கரிகளைக் கொண்டும் (மலம், ஜலம்
கழித்தபின்) சுத்தம் செய் கிறார்கள். ஆனால் அவைகளில் தான் எங்கள் உணவை அல்லாஹ்
வைத்துள்ளான்’ என்று முறையிட்டது. அதன் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அவைகளைக் கொண்டு சுத்தம் செய்வதை விட்டும் எங்களை தடுத்தார்கள். (அறிவிப்பாளர் :
ஹள்ரத் இப்னு மஸ்ஊத்(ரலி),
நூல்: அபூதாவூது)
இந்த இடங்களில் கழிக்கக் கூடாது
1) “உங்களில்
எவரும் (சுவர்களிலோ, பூமியிலோ)
உள்ள பொந்துகளில் சிறுநீர் கழிக்கவேண்டாம்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்:
ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஸர்ஜஸ் (ரலி),
நூல்: அபூதாவூது)
பொந்துகள்,
பூச்சிகள் மற்றும் பாம்பு,
தேள் போன்ற விஷ ஜந்துக்களின் வீடுகள். அதில் சிறுநீர் கழிப்பதால் அவைகளுக்கு
தீங்கு நேரிடுகிறது. சில சமயம் விஷ ஜந்துக்கள் வெளியே வந்தால் சிறுநீர்
கழிப்பவருக்கு தீங்கு நேரிட வாய்ப்புள்ளது. எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் இதை விட்டும் தடுத்துள்ளார்கள்.
2) “சாபத்தை
பெற்றுத் தரக்கூடிய இரண்டு விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூற,
அவை எவை? என்று
ஸஹாபாக்கள் வினவினார்கள்” (1)
நடமாடும் பாதையில் மலம்,
ஜலம் கழிப்பது, (2) மக்கள்
ஓய்வெடுக்கும் மர நிழலில் மலம்,
ஜலம் கழிப்பது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்:
அபூஹுரைரா (ரலி), நூல்:
முஸ்லிம்)
மல ஜலம் கழித்த பின் ஓதும் துஆ
1) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்,
ஜலம் கழித்துவிட்டு வெளியே வந்த பிறகு ‘குஃப்ரானக’ என்று ஓதுவார்கள்.
(அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி)
2) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்,
ஜலம் கழித்த பின்பு ‘அல்ஹம்துலில்லாஹில்லதி அத்ஹப அன்னியல் அதா வஆஃபானீ’
(என்னை விட்டும் அசுத்தத்தை நீக்கி எனக்கு ஆரோக்கியமளித்த அல்லாஹ்விற்கே எல்லா
புகழும்) என்ற துஆவை ஓதுவார்கள்.
(அறிவிப்பாளர்: ஹள்ரத் அனஸ் (ரலி),
நூல்: இப்னுமாஜா)
எனவே நாம் கழிப்பிடம் விட்டு வெளியேறும் போது இவ்விரு
துஆக்களையும் ஓதிக் கொள்ளவேண்டும்.
கையை நன்றாக கழுவுவது
நான் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்தேன்! ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்,
ஜலம் கழித்தபின் அதைக் கொண்டு சுத்தம் செய்தார்கள். பிறகு மண்ணில் தமது கையை
தேய்த்தார்கள். பிறகு மீண்டும் பாத்திரத்தில் தண்ணீர் வர வைத்து உளுஃ
செய்தார்கள்.(அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்)
ஹதிஸ் ஒளியில மேலும் சில மஸாயில்கள்
1 கழிவறையில்
பேசக்கூடாது - அவ்வாறு பேசுபவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்.
2
கழிவறையில் இருப்பவர் பாங்கு சப்தத்தைக் கேட்டால் பதில் கூறக்கூடாது. வெளியே
வந்தபிறகு தான் கூறவேண்டும்.
3 தும்மினால்
அல்ஹம்துலில்லாஹ் என்று கழிவறையில் நாவினால் கூறக் கூடாது. மனதில்
கூறிக்கொள்ளலாம். (ஏனெனில் அது அல்லாஹ்வை துதிப்பதிற்குரிய இடமில்லை.
4 யாரேனும் ஸலாம் சொன்னாலும் பதில் கூறக்கூடாது.
5 சிறுநீரை முழுமையாக வெளியேற்றுவதற்காக சிறுநீர்
கழித்ததும் அடி வயிற்றுப் பகுதியை தடவிக் கொடுப்பது அல்லது சற்று கனைப்பது நல்லது.
6 குளியலறையில் சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். அதனால் வஸ்வஸா எனும் (தனது சுத்தத்தின்
மீது) சந்தேகம் வரும்.
7 சிறுநீர்
துளிகள் நம்மீது தெறிக்காத வண்ணம் சிறுநீர் கழிக்க வேண்டும்.
8 மேட்டுப்
பகுதியை நோக்கி சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
தடுத்துள்ளார்கள். ஏனெனில் சிறுநீர் நம்பக்கமே திரும்பிவரும்.
9 தேங்கியிருக்கும் நீரில் சிறுநீர் கழிக்கக்
கூடாது.
10 கட்டியான
பூமியில் சிறுநீர் கழிக்கக் கூடாது. அப்படி கட்டியாக இருப்பினும் அதை கம்பு
போன்றதால் சிறிது குத்திவிட்டு அதை இலகுவாக்கிய பிறகு தான் அதில் சிறுநீர்
கழிக்கவேண்டும்.
நவீன விஞ்ஞானம் கூறும் பலன்கள்
BIO-CHEMISTRY கலை நிபுணர்
ஒருவர் கூறுகிறார் : மலம் கழிப்பதற்காக தூரமான இடத்திற்கு செல்லுங்கள். இன்று
கிராமங்களெல்லாம் நகரங்களாக மாறி தன் அறையிலேயே கழிவறை இருப்பதால் மனிதன் மலம்
கழிக்கும் முன் சிறிது நேரம் நடக்க வாய்ப்பு ஏற்படுவதில்லை. எனவே தான் மலச்
சிக்கல், வாயுப்
பிரச்சனை போன்ற கோளாறுகள் உண்டாகிறது. சிறிது நேரம் நடப்பதால் குடல் இயக்கங்கள்
சீராகி மலம் முழுவதுமாக இலகுவாக வெளியேறுவதால் மனிதன் ஆரோக்கிய மடைகிறான்.
PHYSIOLOGY யில்
முதிர்ச்சி பெற்ற வல்லுநர் ஒருவர் எழுதுகிறார். என்னிடம் ஒரு மாற்றுமத விஞ்ஞானி
நீங்கள் (முஸ்லிம்கள்) உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு நடை
முறையை பேணி வந்தால் உங்களுக்கு நோயே வராது! உங்களிள் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் மலம், ஜலம்
கழிப்பதற்கு கற்று கொடுத்துள்ள முறையில் நாமும் மல ஜலம் கழித்தால் (APPERTICITIS) குடல்வாழ் சுழற்சி,
மூலம், நீங்காத
மலச்சிக்கல், கழுத்து
சம்பந்தமான நோய்கள் வராது என்று கூறினார்.
* மண் கட்டி - டேலாவை உபயோகிப்பதால் நன்றாக சுத்தம்
ஏற்படுவது மட்டு மின்றி அதில் இருக்கும் (Ammonium Chloride) நவச்சாரம்
சிறுநீர்ப்பை தொற்று நோய் களில் சிறுநீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கவும்
பயன்படுகிறது.
* டாக்டர் ஹலூக் என்பவர் கூறுகிறார்: பொதுவாக மண்ணிற்கு கிருமிகளை
அடியோடு அழித்திடும் தன்மை உள்ளதால் அதன் மூலம் சுத்தம் செய்வதின் மூலம் (Cancer of Penis) ஆணுறுப்புப்
புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மட்டுமின்றி உறுப்புகளில் கிருமிகளின் காரணமாக
காயாமல் இருக்கும் காயங்கள் உள்ள ஒருவருக்கு தொடர்ந்து டேலாவை உபயோகப்படுத்த
அறிவுறுத்தி பின்பு அதனால் அவருக்கு நிவாரணமும் ஏற்பட்டது.
* டாக்டர் முஹம்மது தாரீக் மஹ்மூத் அவர்கள் கூறுகிறார்கள் :
டாய்லட் பேப்பர் தயாரிக்கும் ஃபேக்டரியான அதிகாரியை சந்தித்த போது அவர் “பலவகையான
கெமிக்கல் சேர்ப்பதின் முலமே இது போன்ற பேப்பர்களை உருவாக்க முடியும். இதனால் தோல்
நோய்கள் (Eczema) படை, அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை நோய்கள், கொப்புளங்கள்
உண்டாக அதிகப்படியான வாய்ப்புள்ளது. எனவே டேலாவே சிறந்தது” என்று என்னிடம்
இரகசியமாக கூறினார்.
* மேலும் லண்டனிலுள்ள டாக்டர் கெனன் டேவஸ் என்பவர் ஐரோப்பிய
மக்களிடம் “நீங்கள் கலர் கலரான டாய்லெட் பேப்பர்களை மட்டுமே உபயோகப் படுத்திக்
கொண்டிருப்பதை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் வெகு சீக்கிரமே
மர்மஸ்தான கேன்ஸர், தோல் அலர்ஜி, (Skin Infection) ரைவஸ் எனும் நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய்கள் (viral Diseases) உங்களை தாக்குவதை
எதிர்பாருங்கள்” என்று எழுத்து மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.
* எலும்புகள் விட்டைகளில் டெட்டனஸ் Tetanus,
மற்றும் டைபி என்னும் நோயணுக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அதன் மூலம்
சுத்தம் செய்தால் கிருமிகள் உடலில் ஊடுருவி குடற்காய்ச்சல் (Typhoid) வாய்
திறக்க முடியாமல் பூட்டிக் கொள்ளுதல்,
தசைகள் விறைத்தல், விட்டுவிட்டு
வலிப்பு, மூச்சுவாதம்
போன்ற கடும் நோய்கள் மனிதனை தாக்குகின்றன. அது மட்டுமின்றி கிழே கிடக்கும்
எலும்புகளில் விஷத்தன்மையுள்ள கிருமிகள் நிறைந்த எச்சில் கொண்ட விலங்குகள், உயிரினங்கள் வாய் வைத்திருந்தால்
மேலும் பல நோய்கள் உண்டாகும்.
* நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதால் (Prostatitis) சுக்கிலப்பை
அழற்சி ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. போகப்போக சிறுநீர் அடைப்பு, சொட்டு சொட்டாக
சிறுநீர் வந்து கொண்டேயிருப்பது,
கிட்னியில் கல், குடலிறக்கம்
போன்ற நோய்கள் உருவாக ஆரம்பிக்கின்றன.
* சிறுநீர் கழித்தபின்பு இடது கையால் சுத்தம் செய்ய
வேண்டும். இயற்கையாகவே மனிதனின் வலது கையில் ஆரோக்கியமளிக்கும் திரவமும் இடது
கையில் நோயின் திரவமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும். வலது கையைக் கொண்டு
அசுத்தத்தை நீக்கினால் திரவ அமைப்பு மாறி அதன் தாக்கம் மூளையிலும் நரம்பு
திசுக்களால் உருவாக்கப்பட்ட தண்டுவடத்திலும் ஏற்படுகிறது.
* மலம்,
ஜலம் கழித்ததும் மண் (அல்லது சோப்பு) போட்டு கையை கழுக வேண்டும். ஏனெனில்
மண்ணில் உயர் தரமான (Anti Septic) ஆண்டி செப்டிக் உள்ளது. நாயின் எச்சியில் இருப்பது போன்ற
விஷத்தன்மை கொண்ட கடுமையான கிருமிகளையும் முழுமையாக அழித்துவிடுகிறது. எனவே
முடிந்தளவு மண்ணைக் கொண்டு தேய்த்துக் கழுக வேண்டும்.
* சிறுநீரை அடக்கக் கூடாது. எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள்தொழுகை நேரத்தில் சிறுநீர் வந்தாலும் சிறுநீர் கழித்துவிட்டு
தொழுகச் சொல்லியுள்ளார்கள். ஏனெனில் சிறுநீரை அடக்குவதால் மூளை, குடல்கள், நரம்புகள்
பாதிப்படைகின்றன. (நூல் : சுன்னதே
நபவீ அவ்ர் ஜதீத் ஸைன்ஸ்)
ஆக நபிகள் நாயகத்தின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிமுறைகளை
பேணி நடக்கும் போது ஈருலக பலன்களையும் ஒரு சேர பெற்றுவிடமுடியும். வல்லோன் அல்லாஹ்
அனைவருக்கும் இந்த பாக்கியத்தை வழங்குவானாக!
No comments:
Post a Comment