உளூஃ எனும் சிறப்பான
அங்க சுத்தியை இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மார்க்கமும் அறிமுகப்படுத்தவில்லை. இதன் மூலம்
மனிதர்களை பரிசுத்தப்படுத்தியது இஸ்லாம். அல்லாஹ்வுடன் நெருங்குவதற்குரிய சிறந்த வணக்கமான
தொழுகைக்கும் உளூஃவை அவசியமாக்கியது.
“ஈமான் கொண்டோர்களே! நீங்கள் தொழுகைக்காக தயாரானால் உங்களின் முகங்களையும் கைகளையும்
முட்டுக்கைகள் வரை கழுகிக் கொள்ளுங்கள்! மேலும் உங்களின் தலைகளை மஸஹ் செய்து கொள்ளுங்கள்.
மேலும் கரண்டைக் கால்கள் வரை உங்களின் கால்களை கழுகிக்கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 04:06)
முஃமினின்
அடையாளம்
ஹள்ரத் தவ்பான் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களே! நீங்கள் நடு நிலைமையாக, நீதமாக நடந்து கொள்ளுங்கள்! ஒரு விஷயத்தில் ஸ்தராமக
இருங்கள்! உங்களிடத்தில் உள்ள அமல்களில் சிறந்தது தொழுகையாகும். முஃமின்களைத் தவிர
மற்றவர்கள் யாரும் உளூஃவை பாதுகாக்கமாட்டார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : பைஹகீ)
கேள்வி
கணக்கில் முதல் கேள்வி
செயல் வடிவிலான வெளிரங்க
வணக்கங்களுக்கு மக்களின் உள்ளங்களில் முக்கியத்துவம் இருப்பதால் அதன் பக்கம் கவனம்
செலுத்தும் மக்கள் சுத்தம் செய்வதில் மெத்தனம் காட்டுகிறார்கள். ஆனால் சுத்தம் ஈமானில்
பாதி என்று ஹதீஸ் கூறுகின்றது. மறுமையில் கேள்வி கணக்கின் தொடக்கமும் சுத்தத்தைப் பற்றித்தான்
இருக்கும்.
ஹள்ரத் அபுல் ஆசியா
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; “நாளை மறுமையில் அடியானின்
கேள்வி கணக்கின் ஆரம்பம் சுத்தம் பற்றியதாகும். அவனின் சுத்தம் சரியாக, அழகாக இருந்தால் அவனது தொழுகையும் சரியாக இருக்கும்.
அவனது தொழுகை சரியாகிவிட்டால் அவனது இதர வணக்கங்களும் சரியானதாகிவிடும்”. (நூல்
: கன்ஜுல் உம்மால்)
ஒவ்வொரு
எட்டிற்கும் நன்மையுண்டு
“ உங்களில் ஒருவர் (சுன்னத்துகள், முஸ்தஹப்புகளைப் பேணி) நல்ல முறையில் உளூஃ செய்து விட்டு பின்பு தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு
செல்வாரோ அவர் மஸ்ஜிதிற்குள் நுழையும் வரை அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்கும்
ஒரு பாவம் அழிக்கப்பட்டு அவரது அஃமால் நாமா பட்டோலையில் ஒவ்வொரு எட்டிற்கும் ஒரு நன்மையும்
எழுதப்படுகிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : கன்ஜுல் உம்மால்)
அடுத்த
தொழுகை வரை மன்னிப்பு
ஹள்ரத் உஸ்மான் (ரலி)
அவர்கள் ஓர் உயரமான இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அஸர் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதும்
கீழிறங்கி உளூஃ செய்து விட்டு, மக்களைப் பார்த்து
கூறினார்கள்: “மக்களே! உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன். நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எந்த மனிதன் (சுன்னத்துக்கள்,
முஸ்தஹப்புகளை பேணி) அழகிய
முறையில் உளூஃ செய்து பின்பு தொழுகிறாரோ அவருடைய அந்த தொழுகையிலிருந்து அடுத்த தொழுகை
வரையுள்ள (சிறு) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன.” (நூல் : அத்தர்ஃகீப்)
‘பிஸ்மில்லாஹ்’ கூறி உளூஃ செய்வதின் சிறப்பு
ஹள்ரத் அபூ ஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யார் உளூஃ செய் யும் பொழுது அல்லாஹ்வின் பெயரைக்
(பிஸ்மில்லாஹ்) கூறி உளூஃ செய்கிறாரோ அந்த உளூஃவினால் அவரது உடல் முழுவதும் பரிசுத்தமாகின்றது.
யார் அல்லாஹ் வின் பெயரைக் கூறாமல் உளூஃ செய்கிறாரோ அந்த உளூஃவினால் அவர் உளூஃ செய்த
உறுப்புகள் மட்டும் பரிசுத்தமாகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள் (நூல் : தார குத்னீ)
உறுப்புகளின்
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
ஹள்ரத் அபூ உமாமா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “ஒருவர் தொழுக நாடி, உளூஃ செய்ய எழுந்து, தன் இரு கைகளை மணிக்கட்டு வரை கழுகியதும் அவருடைய
உள்ளங்கைகளின் பாவங்கள் அத்தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்து விடுகின்றன. பிறகு
வாய் கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தி,
மூக்கை சுத்தம் செய்துதும்
அவரின் நாவு, உதடுகளின் பாவங்கள்
அத்தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்து விடுகின்றன. பிறகு அவர் முகத்தை கழுகியதும்
அவருடைய காது மற்றும் கண்களின் பாவங்கள் அத்தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்து விடுகின்றன.
பிறகு கைகளை முழங்கை வரையிலும் கால்களை கணுக்கால் மொழி வரையிலும் கழுகியதும் அவர் அன்று
பிறந்த பாலகனைப் போன்று தன் எல்லாப் பாவங்களை விட்டும் தூய்மையாகி விடுகின்றார். பிறகு
அவர் தொழுக நின்றதும் அத்தொழுகையால் அவரின் தகுதியை அல்லாஹ் உயர்த்துகின்றான்.” என்று
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மது)
வானவரின்
துஆ
(உளூஃ என்பது தொழுகை
மற்றும் சில வணக்கங்களுக்காக மட்டுமே என்று பொதுவாக விளங்கப்பட்டு வருகிறது. ஆனால்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கும் பொழுதும் உளூஃ செய்ததாக பல ஹதீஸ்களில்
காணக்கிடைக்கிறது)
ஹள்ரத் அபூ ஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதர் உளூஃவுடன் இரவு தூங்கினால் (முன்கர்,
நகிர் அன்றி வேறு) ஒரு மலக்கும்
அவருடன் இரவு தங்குகிறார். அந்த மனிதர் விழிக்கும் பொழுது ‘இறைவா! இவர் உளூஃவுடன் தூங்கினார்
இவரை மன்னிப்பாயாக!’ என்று அந்த மலக்கு துஆ செய்வார்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : பைஹகீ)
துஆ ஏற்றுக்
கொள்ளப்படும்
‘ஒரு மனிதர் இரவில் உளூவுடன் சுத்தமாக தூங்கி, பிறகு இரவில் ஏதேனும் ஒரு பகுதியில் விழித்ததும்
உலகம், மறுமையின் ஏதேனும் ஒரு தேவையை
அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹுதஆலா அதைக் கொடுத்து விடுகின்றான்’ என்று நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூது£வூத்)
இறுதி முடிவு
சிறந்ததாகும்
ஹள்ரத் இப்னு ஆஷிப்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நீ தூங்கச் செல்லும் பொழுது தொழுகைக்கு உளூஃ செய்வதைப்
போன்று சிறந்த முறையில் உளூஃ செய்து பிறகு வலப்பக்கமாக ஒருங்கிணைந்து “அல்லாஹும்ம அஸ்லம்து
நஃப்ஸீ இலைக, வஃபவ்வழ்து அம்ரீ
இலைக, வஅல்ஜஃது ளஹ்ரீ இலைக,
ரஃபதன் வரஹ்பதன் இலைக,
லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க
இல்லா இலைக, அல்லாஹும்ம ஆமன்து
பிகிதாபிகல்லதீ அன்(z)ஜல்த வபிநபிய்யிகல்லதீ அர்ஸல்த”
என்ற துஆவை ஓதினால் அல்லாஹ்வின் நாட்டப்படி இரவில் நீ உயிர் துறந்தாலும் ஈமானுடைய நிலையிலேயே
மரணிப்பாய்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கூறினார்கள். (நூல் : புகாரி)
எப்பொழுது
உளூஃவுடன் இருப்பதின் நன்மை
ஹள்ரத் அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடத்தில் “மகனே!
எப்பொழுதுமே உளுஃவுடன் இருக்க உனக்கு சக்தியிருப்பின் அப்படியே இருந்துகொள்! ஏனெனில்
யாருடைய உயிர் அவர் உளூஃவுடையவராக இருக்கும் நிலையில் வாங்கப்படுகிறதோ அவருக்கு மார்க்கப்
போரில் வெட்டுண்டவரின் (ஷஹீதின்) நன்மை எழுதப்படுகிறது” என்று கூறினார்கள். (நூல்
: கன்ஜுல் உம்மால்)
சோதனைகளை
விட்டும் பாதுகாப்பு
ஹள்ரத் யஜீத்-அஸ்ஸக்ஸகீ
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அஹ்லுல் கிதாபைச் சார்ந்த ஒரு பண்டிதர் என்னிடம் கூறினார்.
மூஸா (அலை) அவர்களுக்கு ‘நீங்கள் உளூஃ அல்லாதவராக இருக்கும் நிலையில் உங்களை ஒரு சோதனை
வந்தடைந்தால் அது உங்கள் தவறாகும். எனவே அப்பொழுது நீங்கள் உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்.
(ஏனெனில் நீங்கள் உளூஃ அல்லாதவராக இருந்தால் அச்சோதனை உங்களை இலகுவாக வந்தடைந்துவிட்டது)’
என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. (நூல் : பைஹகீ)
உளூஃ இருந்தும்
புதிதாக உளூஃ செய்வதின் நன்மைகள்
“ஒருவர் தனக்கு (ஏற்கனவே) உளூஃ இருந்தும் புதிதாக உளூஃ செய்தால் அவருக்கு (அதிகப்
படியான) பத்து நன்மைகள் கிடைக்கும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)
உளூஃவின்
ஒளி
ஹள்ரத் அபூ ஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “கியாமத் நாளில் எனது உம்மத்தினரின் உளூஃவின் உறுப்புக்கள்
அவர்கள் உளுஃ செய்ததின் பரக்கத் தினால் ஒளிமிக்கதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும்
நிலையில் தான் எழுப்பப் படுவார்கள். எனவே தமது ஒளியை அதிகப்படுத்த நினைப்பவர்கள் அதிகப்படுத்திக்
கொள்ளட்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)
உளுஃவைப்
பற்றி நவீன விஞ்ஞானம் கூறுவதென்ன?
* நாம் ஏதேனும் ஓர்
வேலையில் நமது கைகளை ஈடுபடுத்திக் கொண்டேயிருப்பதால் நமது கைகளில் கண்ணுக்குத் தெரியாத
கிருமிகள் ஒட்டிக் கொள்கின்றன. எனவே கைகளை கழுகாமல் அப்படியே வாய் கொப்பளித்தாலோ அல்லது
உணவு அருந்தினாலோ வாய் வழியாக அக்கிருமிகள் உடலினுள் நுழைந்து பெரும் பெரும் நோய்களுக்கு
அஸ்திவாரமிடுகின்றன. கிருமியுடன் உள்ள கைகள் காலையிலிருந்து இரவு வரை கழுகப்படாமலே
இருந்தால் சீக்கிரமாகவே கைகளில் கை நிறம் மாறுதல், சூடாகிவிடுதல், கிரந்தி நோய் (Eczema) பூஞ்சை நோய் (Fungus) ஏற்பட்டு அரிப்பு ஏற்படுதல்
போன்ற நோய்கள் சிறிது சிறிதாக உண்டாகின்றன. எனவே கைகளை குறைந்தது ஒரு நாளைக்கு 5 முறை கழுகும் பொழுது இந்நோய்கள் அடியோடு அழிந்து
விடுகின்றன. இன்றை மருத்துவம் பன்றிக் காய்ச்சலை விட்டும் பாதுகாப்புப் பெற கைகளை அடிக்கடி
கழுகச் சொல்கிறது.
** நாம் உணவு உண்ணும்
பொழுது ஏதேனும் ஒரு வஸ்து பல் இடுக்குகளி லோ, ஈர்ப்பகுதியிலோ மாட்டிக் கொள்கிறது. குறிப்பிட்ட
நேரம் வரை அதை சுத்தம் செய்யாத போது அது புரையோடுதலாகி (Septic)பலவிதமான நோய்களுக்கு
காரண மாகிறது. எனவே உளூஃ செய்யும் போது வாய் கொப்பளித்தல், மிஸ்வாக் செய்தல் போன்றவற்றால் இந்நோயிலிருந்து
பாதுகாப்படைகிறோம்.
** வாய் கொப்பளிப்பதால்
‘ரை பிளேவின்’ என்ற ஊட்டச்சத்தின்மையால் உண்டாகும் உதட்டின் ஓரங்களில் வெளுத்து மாவு
போன்ற வெண்ணிற புண் (CHEIOLSIS ANGULAS STOMATITIS) மற்றும் வாய் உறுப்பின் உட்பகுதியில்
பூஞ்சை நோய் ஏற்பட்டு கடும் அரிப்பு ஏற்படுதல் (CANDIDIASIS.
MONILIASIS) போன்ற தொல்லை தரும் நோய்களும் குணமடைகின்றன.
** நாம் உயிர் வாழ்வதற்கு
அவசியமான சுவாசத்திற்குரிய ஒரே இடம் நாசிப் பகுதியாகும். குறிப்பாக இன்றைய மாசு படிந்த
காலத்தில் காற்றிலுள்ள கிருமிகள் மூலமாக நாசிப்பகுதிக்குள் எண்ணற்ற நுண்கிருமிகள் படிந்துவிடுகின்றன.
அவை நம் சுவாசத்தின் வழியாக உடலினுள் சென்று பல்கிப் பெருகி பல நோய்களை உண்டாக்குகிறது.
அது மட்டுமின்றி மூக்கின் வலைப் பகுதியையும் சிறிது சிறிதாக சேதாரப் படுத்துகிறது.
நாம் உளூஃ செய்யும் போது நாசிக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்து விடுவதால் அக்கிருமிகள்
முழுவதுமாக அழிந்து விடுகின்றன.
** எப்பொழுதும் ஜலதோசம்
பிடித்தவர்களுக்கும் மூக்கின் உட்பகுதியில் காயம் உள்ளவர்களுக்கும் நாசிக்கு நீர் செலுத்துவதால்
சிறந்த நிவாரணம் கிடைக்கிறது.
** உளுஃவின் போது
நம் முகத்தை நன்றாக கழுகுவதால் முகத்தின் கிருமிகள் மூலம் உண்டாகும் பருக்கள் மற்றும்
ஒவ்வாமை போன்ற நோய்கள் தடுக்கப்படுகிறது.
** முகத்தை நன்றாக
தேய்த்து கழுகுவதால் முகம் மஸாஜ் செய்யப்பட்டு முகத்திலும் அதைச் சுற்றிலுமுள்ள இரத்த
ஓட்டம் சீராகிறது. ஒரு நாளைக்கு இவ்வாறு 5 முறை கழுகுவதால் முகம் பளிச் சென்றும் அழகாகவும் காட்சியளிக்கும்.
** கண் இமைகள்,
புருவங்கள் குளிர்ந்துவிடுவதால்
கண்ணின் ஓரப்பகுதிகளும் குளிர்ந்து கண் சம்பந்தமான நோய்களும் நெருங்குவதில்லை. எனவேதான்
கண்கள் சம்பந்தப்பட்ட நோய்க்கு மருத்துவம் கண்களை அடிக்கடி கழுகச் சொல்கிறது.
** மருத்துவ ஆராய்ச்சியாளர்
டாக்டர் ஜார்ஜ் எல் கூறுகிறார் “மனிதனின் தாடைப் பகுதியில் சாதாரண கிருமிகளும் பரவக்கூடிய
அசாதாரண கிருமிகளும் படிந்து விடுவதால் தாடியை கோதிக் கழுக வேண்டும். அதனால் கிருமிகள்
அழிந்து விடுவதோடு தாடியின் வேர்களும் உறுதியாகி தாடை அழகாகிறது. மேலும் தாடி நனைவதால்
குரலில் தெளிவும் ‘‘ThyRoid’’ போன்ற கழுத்து நோய்களை
விட்டும் மனிதன் பாதுகாப்பு பெறுகிறான். ஆனால் தாடியைச் சிறைப்பதால் தாடை நோய்களும்
கழுத்து நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.”
** நமது முட்டுக்கைகளில்
3 வித இரத்தக் குழாய்கள் உள்ளன.
அவை இருதயம், மூளை, ஈரலுடன் நேரடியாக தொடர்புடையவை. அவைகளை நாம் தேய்த்துக்
கழுகுவதால் தொடர்புடைய அவ்வுறுப்புகள் புத்துணர்வு பெற்று உறுதியாகின்றது.
** பிரான்ஸ் நாட்டில்
நடந்த ஒரு நிகழ்ச்சி; ஒரு மனிதர் உளூஃ செய்வதைக்
கண்ட அங்குள்ள மூளை அறுவை சிகிச்சை நிபுணர் “நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று கேட்க ‘பாகிஸ்தானிலிருந்து’ என்றார். உங்கள்
நாட்டில் மன நிலை பாதிக்கப் பட்டோர் மருத்துவமனை உள்ளதா? என்று கேட்க “2 அல்லது 3 இருக்கும். எனினும் எனக்கு சரியாகத் தெரியவில்லை.
ஏன் கேட்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த நிபுணர் “நீங்கள் இப்பொழுது செய்ததைப்
(உளூஃ) போன்று தினமும் செய்வீர்களா?” என்று கேட்க “குறைந்தது ஒரு நாளைக்கு 5 முறையாவது செய்வோம்” என்றார். ஆச்சரியமடைந்த அந்த நிபுணர் தன்னை அவரிடம் அறிமுகப்
படுத்தியப்பின் இவ்வாறு கூறினார்.
“இங்கே பிரான்ஸ் நாட்டில் எங்கு நோக்கிலும் மன நிலை பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை
அதிகம் உள்ளது. அதைப் பற்றி நாங்கள் ஒரு குழு ஆராய்ந்தோம். இயற்கையாகவே மனிதனின் மூளைப்பகுதியிலிருந்துதான்
உடல் முழுக்க உத்தரவுகள் இடப்படுகின்றன. மேலும் நமது மூளை அதைச் சுற்றிலும் உள்ள திரவத்தில்
மிதந்து கொண்டிருப்பதால் நாம் ஓடுகிறோம், குதிக்கிறோம், நடக்கிறோம். இதனால்
மூளைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இத்திரவம் இல்லாவிட்டால் மனிதனின் மூளை
வெகு சீக்கிரம் செயலிழந்துவிடும்.
மேலும் மூளையிலிருந்து
மெல்லிய நரம்புகள் உண்டாகி கழுத்தின் பிடிமானத்தில் முழு உடலுக்கும் செல்கிறது. தலைமுடியின்
பராமரிப்பின்மையாலும் கழுத்துப் பகுதி மற்றும் தலைப் பகுதியில் தொடர்படியாக பல நாட்கள்
தண்ணீரின் ஈரம் படாவிட்டாலும் அந்நரம்புகள் காய்ந்து அத்திரவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
எனவே ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது தண்ணீரால் தாங்கள் தடவிய இடத்தில் (மஸஹ் செய்யும்
இடம்) தடவினால் இந்நோயை தவிர்க்கலாம் என்று எங்கள் பல ஆண்டுகளின் ஆராய்ச்சி தீர்ப்பு
சொல்லியது. அது மட்டுமின்றி தாங்கள் கழுத்துப் பகுதியிலும் தடவுவதைப் பார்த்தேன். தாங்கள்
செய்வது போன்று செய்தால் கழுத்து பக்கவாதமும் ஏற்படாது” என்று கூறினார்.
(நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு சுன்னத்தைப் பற்றி ஆராயவே தனது வாழ்நாளில் இந்த டாக்டர்
பெரும் பகுதியை எடுத்துக் கொண்டார். அப்படியானால் மற்றுமுள்ள சுன்னத்துக்கள் ஃபர்ளுக்களைப்
பற்றி நாம் சொல்ல வேண்டியதேயில்லை)
** சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு
நாம் இப்படித்தான் ஆலோசனை கூற வேண்டும். “நீங்கள் முகத்தை கழுகுவதில் கவனம் செலுத்துவதைப்
போன்று கால்களை கழுகுவதிலும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு
கால்களின் மூலம்தான் கிருமிகள் சீக்கிரமாக Infection ஆகி தொந்தரவு கொடுக்கிறது. ஷுக்கள் அணிவதால் பாதுகாப்பு
பெறலாம் என்பது தவறான கருத்து. ஏனெனில் ஐரோப்பியர்கள் தூங்கும் போது கூட ஷுக்களை கழற்றுவதில்லை.
ஆனால் கால் வியாதிகளில் அதிகம் அவதிப்படுவது அவர்களே! எனவே கால்களை நன்றாகத் தேய்த்து
கழுகுங்கள்”
** கால்களை விரலிடுக்குகள்
வரை தேய்த்து கழுகுவதால் நிம்மதியற்ற நிலை தூக்கமின்மை போன்ற நோய்கள் நீங்குகிறது.
** கோபம் அதிகமானால்
உடனே உளூஃ செய்ய வேண்டும்! ஏனெனில் அதிகமான பிளட் பிரஷர் உளூஃவின் மூலம் சீராகிறது.
(ஆதார நூல் : சுன்னதே நபவி அவர் ஜதீத் ஸைன்ஸ்)
ஹதீஸ்களிலும் விஞ்ஞானத்தில்
உளூஃவைப் பற்றி இன்னும் எத்தனையோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. நாம் உளூஃவிலும் அதிகம்
கவனம் எடுக்க வேண்டும். அதன் ஃபர்ளுகள், சுன்னத்துக்கள், முஸ்தஹப்புகளை முழுமையாக
பேணி உளூஃ செய்யவேண்டும். (உளூஃவில் மிஸ்வாக் செய்வது தனிப்பெரும் சுன்னத்! அதைப் பற்றி
மிஸ்வாக் என்ற தலைப்பில் விரிவாக விளக்கமாக தந்துள்ளோம்.)
No comments:
Post a Comment