ரமளானில் நோன்பாளி
எவ்வளவுதான் முயன்றாலும் ஏதேனும் குறை ஏற்படத்தான் செய்கிறது. உண்ணுதல், குடித்தல் போன்ற நோன்பை முறிக்கும் காரியங்களை தவிர்ந்திருத்தல்
மிக இலகுவானதாக உள்ளது. ஆனால் வீண் பேச்சுகள், வீண் செயல்கள் போன்ற நோன்பின் நன்மையை குறைத்துவிடக்
கூடிய செயல் களை விட்டும் தவிர்ந்திருத்தல் முழுமையான முறையில் ஏற்படுவதில்லை.
வல்ல அல்லாஹ் அக்குறைகளையும்
நீக்கி நோன்பை பரிபூரணமாக்கும் பொருட்டு, அதற்கான முழு நன்மையையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக தன் அடியார்கள் மீது அருள்புரிந்து
நோன்பின் முடிவின்போது ஸதகதுல் ஃபித்ரு எனும் தர்மத்தை கடமையாக்கியுள்ளான்.
ஹள்ரத் இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
பித்ரா ஜகாத்தை நோன்பாளியின்
நோன்பை வீண் பேச்சு, வீண் செயல்களை விட்டும்
சுத்தப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாகவும்
(அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம்) கடமையாக்கினார்கள்.
எனவே எவர் (பெருநாள்)
தொழுகைக்கு முன்பே அதனை நிறைவேற்றுகின்றா ரோ அது ஒப்புக் கொள்ளப்பட்ட ஜகாத்தாக ஆகும்.
எவர் தொழுகைக்குப் பின் அதனை நிறைவேற்றுகிறாரோ அது பொதுவான தர்மங்களில் ஒரு தர்மமாக
ஆகும். (அபூதாவூத் : 1609)
இந்த ஹதீஸில் ஸதகதுல்
ஃபித்ர் கடமையானதற்கான இரு நோக்கங்களை கூறப்பட்டுள்ளது. 1. நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்கான பரிகாரம்,
2. சமுதாயத்தினரின் ஏழைகளும்
பெருநாள் அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் உணவிற்கான ஏற்பாடு.
எனவே தான் மற்றொரு ஹதீஸில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இன்றைய நாளில் ஏழைகளை (யாசகத்தை
விட்டும்) தேவையற்றவர்களாக்குங்கள்” (தாரகுத்னீ 2157) என்று நவின்றுள்ளார்கள்.
எனவே வசதியுள்ளவர்
ஸதகதுல் ஃபித்ரை உரிய நேரத்தில் (தொழுகைக்கு முன்பே) நிறைவேற்றுவது மிக்க அவசியமாகும்.
எனவே தான் ஹள்ரத் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பெருநாளிற்கு இரண்டு நாட்கள்
முன்பே ஸதகதுல் ஃபித்ரை நிறைவேற்றுபவர்களாக இருந்துள்ளார்கள். (அபூதாவூத்
: 1610)
இவ்வாறு முன்னரே கொடுப்பது
சாலச் சிறந்ததும் கூட ஏனெனில் அந்த ஏழைகள் பெருநாளிற்காக முன்னரே தயாராக இருக்கலாம்.
இவ்வுயரிய இரு நோக்கங்களுக்காக உள்ள ஸதகதுல் ஃபித்ர் சட்டங்கள் பற்றி சில விஷயங்களை
வாசகர்களுக்காக கேள்வி - பதில் வடிவில் தரப்படுகிறது.
கேள்வி : ஸதகதுல்
ஃபித்ர் - யாரின் மீது கடமை?
பதில் : வாழ்வாதாரத்தின்
அவசியத் தேவை போக மேல் மிச்சமாக ஜகாத்தின் நிஸாபின் அளவு பொருளோ, பணமோ, பெருநாள் அன்று காலை சுப்ஹு உதயமாகும் நேரத்தில் ஒருவருக்கு சொந்தமாக இருப்பின்
அம்மனிதர் மீது ஸதகதுல் ஃபித்ர் கடமையாகும். (ஃபதாவா மஹ்மூதிய்யா 9/614)
(ஷாஃபிஈ : பெருநாள்
இரவை அடைந்து பெருநாள், இரவு, பகலின் தன் மற்றும் தன் குடும்பத்தாரின் அவசிய செலவு
போக மேல் மிச்சமாக கொஞ்சம் பொருளோ, பணமோ இருப்பவரின்
மீது ஸதகதுல் ஃபித்ர் கடமையாகும். (புஷ்ரல்
கரீம் 53/2)
கேள்வி : ஜகாத் மற்றும்
ஸதகதுல் ஃபித்ர் ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?
பதில் : (1) ஜகாத்தின் நிஸாப் சொந்தமாகி ஒருவருடம் ஆகியிருக்க வேண்டும். ஸதகதுல் ஃபித்ரில்
நிஸாபின் அளவு சொந்தம் பெற்று இருந்தால் கடமையாகிவிடும். ஒருவருடம் கழிந்திருக்க வேண்டியது
இல்லை.
(2) ஜகாத்தில் பொருள்,
வளர்ச்சியடையும் தன்மையுள்ளதாக
இருப்பது நிபந்தனையாகும். எனவே தான் அசையா சொத்துக்கள் மீது ஜகாத் கடமையில்லை.
ஆனால் ஸதகதுல் ஃபித்ரில்
வீட்டிலுள்ள உபயோகப்படுத்தப்படாத பொருள்கள் உட்பட எத்தகைய பொருளாக இருப்பினும் அதன்
விலை மதிப்பு நிஸாபுடைய அளவாக இருந்தால் ஃபித்ரா கடமையாகிவிடும்.
கேள்வி : நிஸாபை சொந்தம்
பெற்றவர் யார் யாருக்காக வேண்டி ஸதகதுல் ஃபித்ர் கொடுப்பது கடமை? யார் யாருக்காக கடமையில்லை?
பதில் : தனக்காக,
தன் சிறு பிள்ளைகளுக்காக,
தன் பெரிய பிள்ளைகளில் தனது
பொறுப்பில் உள்ளவர்களுக்காக, தன் அடிமைகளுக்காக,
தன் சிறிய சகோதரர் களுக்காக
ஸதகதுல் ஃபித்ர் கொடுப்பது கடமையாகும்.
பெற்றோர் (தன் பொறுப்பில்
இருந்தாலும்) மனைவி, மற்ற உறவினர்கள்,
(தன் பொறுப்பில் இருந்தாலும்)
பெரிய பிள்ளைகளில் தனது பொறுப்பில் இல்லாதவர் களுக்காகவும் ஸதகதுல் ஃபித்ர் கொடுப்பது
கடமையில்லை.
(துர்ருல் முக்தார்
3/285, ஃபதாவா மஹ்மூதிய்யா 9/636)
(ஷாஃபிஈ : மேற்சொன்னவர்களுடன்
தன் பொறுப்பில் உள்ள பெற்றோருக்காகவும், மனைவிக்காகவும் ஸதகதுல் ஃபித்ர் கடமையாகும்) (புஷ்ரல் கரீம் 53/2)
கேள்வி : ஸதகதுல்
ஃபித்ர் எப்போது நிறைவேற்ற வேண்டும்?
பதில் : பெருநாள்
தொழுகைக்கு செல்லும் முன்னரே நிறைவேற்றி விடவேண் டும். தொழுகையைக் காண பிற்படுத்துவது
மக்ரூஹ் ஆகும். நோன்பு காலங்களிலேயே கொடுத்தாலும் கூடும். (ஆலம்கீரி 1/192, புஷ்ரல் கரீம் 55/2)
கேள்வி : ஸதகதுல்
ஃபித்ராக எந்த பொருளை கொடுக்க வேண்டும்?
பதில் : கோதுமை,
பேரீத்தம் பழம், காய்ந்த திராட்சை ஆகியவற்றைத்தான் ஸதகதுல் ஃபித்ராக
கொடுக்க வேண்டும். எனினும் எவரின் உணவு அரிசியாக இருக்குமோ அவர்கள் அரிசியை கொடுத்தால்
கூடும். ஆனால் இதில் கிரயத்தை தருவதே சிறப்பானது. (ஃபதாவா மஹ்மூதிய்யா 9/626-627)
(ஷாஃபிஈ : அந்தந்த
ஊரின் பெரும்பான்மையாக புழங்கப்படும் உணவு பொருளை ஃபித்ராவாக கொடுக்க வேண்டும்) (புஷ்ரல் கரீம் 55/2)
கேள்வி : ஸதகதுல்
ஃபித்ரின் அளவு எவ்வளவு?
பதில் : கோதுமை போன்றவற்றில்
அரை ஸாவும், பேரீத்தம் பழம்,
காய்ந்த திராட்சைகளில் ஒரு
ஸாவும் அல்லது அவற்றின் கிரயம் கடமையாகும். (ஃபதாவா மஹ்மூதிய்யா 9/619)
அரை ஸாவு என்பது தற்கால
எடையில் ஒரு கிலோ 633 கிராம் ஆகும்.
(ஷாஃபிஈ : எந்த தானியமாக
இருந்தாலும் ஒரு ஸாவு கடமையாகும். கிரயம் கொடுப்பது கூடாது. ஒரு ஸாவு என்பது 2 கிலோ 200 கிராமாகும்)
கேள்வி : கிரயம் எவ்வாறு
போடுவது?
பதில் : பொது மார்கெட்டின்
கிரயம் போட வேண்டும். ரேஷன் போன்றதின் கிரயம் போடக்கூடாது. (ஃபதாவா ரஹீமிய்யா 3/113)
கொடுக்கும் நேரத்திலுள்ள
கிரயமே கவனிக்கப்படும்.
கேள்வி : ஸதகதுல்
ஃபித்ர் - பெற தகுதியானவர் எவர்?
பதில் : ஜகாத்தில்
சொல்லப்பட்ட எட்டுவகையினர் அதற்கு தகுதி பெற்றவர்களாகும். (புஷ்ரல் கரீம்
58/2)
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete